பதிவு சுருக்கம்
- நான்கு மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலை விவரிக்கும் சிறப்பு பார்வை
கோடை வெயிலில் சூடுபிடிக்க இருக்கிறது நான்கு மாநிலத்திற்கான தேர்தல். மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு தேர்தல் வருவதால் பிரச்சாரம் படு ஜோராக சென்று கொண்டிருக்கிறது.
இதில் வங்காளத்தின் நிலைமை தான் மிகவும் மோசமாக உள்ளது.
அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அவர்களுடைய கட்சியினர் ஒரு பக்கம் தலைவலியை தர இன்னொரு பக்கம் பா.ஜ.க கொடுக்கும் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். கடந்த 10 வருடங்களில் காணப்பட்ட அராஜக போக்கும், திரினாமுல் காங்கிரசால் தரப்பட்ட ஊழல் ஆட்சியும், மேற்கு வங்காளத்தை புதிய பாதை நோக்கி அழைத்து செல்ல காத்திருக்கிறது.
வங்காளத்தின் துரதிர்ஷ்டம், இதுவரை மூன்று கட்சிகள் அந்த மாநிலத்தை ஆண்டுள்ளது. காங்கிரசும் இடதுசாரியும் திரினாமுல் காங்கிரசும் இம்மாநிலத்தை ஆண்ட போதும் மக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய ஒரு அரசாங்கமாக இது மூன்றுமே செயல்படவில்லை.
இதில் காங்கிரஸ் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தபோது நக்சல் தலைதூக்கியது. இதுவரை 1968 – 1971-இல் நான்கு முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.
ஆதித்ய பிர்லா குரூப் உரிமையாளர் கூறுகையில், சட்டம் ஒழுங்கற்ற இந்த மாநிலத்தில் என்னால் தொழிலை தொடர முடியவில்லை. அதனால் குடும்பத்துடன் தான் மும்பைக்கு குடிபெயர்ந்ததாக சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
1977-இல் இடதுசாரி, ஆட்சியை கைப்பற்ற பொருளாதாரம் அடியோடு வீழ்ந்தது. அராஜகம் தலைவிரித்தாடியது. முதலமைச்சர் ஜோதி பாசுவும் புத்தாதேப் பட்டார்ச்சியும் தரமான ஆட்சியை வழங்குவது போல வெளியில் பாசாங்கு செய்துக்கொண்டனர். ஆனால் வரலாறு காணாத வன்முறையும், தொழிலதிபர்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அங்கே பொருளாதாரத்தை மிக மோசமாக முடக்கியது.
மம்தா பானர்ஜி வெற்றிபெற்று திரினாமுல் காங்கிரஸ் 2011-இல் ஆட்சி அமைத்தது. இருப்பினும் மம்தா ஆட்சியையும் மக்கள் விரும்பவில்லை. 27.5% முஸ்லீம் ஓட்டுக்களை பெரும்பான்மையாக கைப்பற்ற நினைத்த மம்தா, அவர்களுக்கு சாதகமாக நடந்துக்கொண்டு 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தார்.
மம்தாவின் பிடியிலிருந்த மக்களால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. பா.ஜ.க பற்றிய பொய் பரப்புரைகளே அங்கே அதிகம் இருந்தது. இப்போது தான் திரினாமுல் தலைவர்களுக்கு இருந்த பயம் போக, ஒவ்வொருவராக மம்தா கட்சியை விட்டு விலகி பா.ஜ.க-வில் சேர்ந்து வருகின்றனர்.
பா.ஜ.க அங்கிருக்கும் 70% இந்து வாக்குகளை பெற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. அதனால் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. போனமுறை 2019 லோக்சபா தேர்தலில் இதே யோசனை 40.64% வாக்குகளை பெற உதவியது. இதே யுக்தியை தான் முஸ்லீம் ஓட்டுக்களை கைப்பற்ற மம்தா பானர்ஜி கட்சியும் அம்மாநிலத்தில் கையாண்டது.
சட்டமன்ற தேர்தல்களில் கொடுக்கப்பட வேண்டிய வாக்குறுதிகளும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளும் முற்றிலும் வித்தியாசமானவை. இடதுசாரி காங்கிரஸ் கூட்டணி, திரினாமுல் கட்சியின் முஸ்லீம் ஓட்டுக்களை பிரிக்கும் என தெரிய வருகிறது. அசாவுதீன் ஒவைசி தரப்பு இதில் இன்னும் தனித்து பிரிந்துவிடும்.
2019 லோக்சபா தேர்தலில் 294 இடங்களில் 125 இடம் பா.ஜ.க-வுக்கு கிடைத்தது. இடதுசாரி காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பா.ஜ.க கடுமையாக போட்டி போட்டது. ஆனால் இந்த முறை பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. இதனால் பீகார், வங்காளம் மற்றும் ஒடிசாவில் கூட இனி வரும் காலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காளத்தில் 294 இடங்களில் 200 இடங்களை பா.ஜ.க கைப்பற்றி வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைபெறும் பட்சத்தில் வரலாறு காணாத வகையில் பா.ஜ.க வங்காளத்தில் ஆட்சி அமைக்கும்.
பா.ஜ.க நிச்சயமாக இங்கே காலடி ஊன்றும் எனவும், மம்தா பானர்ஜி கட்சி செய்து வந்த ஊழல்கள், திரினாமுல் கட்சி நடத்திய வன்முறைகள் அனைத்திற்கும் பிரதமர் மோடியிடம் பதில் சொல்ல வேண்டிய நிலை நிச்சயம் வரும் எனவும் பலரும் நம்புகின்றனர்.
2017-இல் உத்தர பிரதேச தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலே பிரச்சாரம் செய்து, அதன் பிறகு யோகி ஆதித்யநாத்தை தேர்வு செய்தது போன்ற ஒரு வரலாற்று நிகழ்வு மீண்டும் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இரண்டாவது முக்கிய சட்டமன்ற தேர்தல் அசாமில் நடக்கவிருக்கிறது. 2018-19-இல் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்த தேசிய குடிமக்கள் பதிவு ஆதரவை பா.ஜ.க இழந்தது.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியை தலைமை தாங்கும் சர்ச்சைக்குரிய முஸ்லீம் மதகுரு பஹ்ருதீன் அஜ்மல், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து சார்பானந்தா சோனோவல் அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் குடிமக்களின் தேசிய பதிவு முறை கைவிடப்பட்டு புதிய முறையும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பங்களாதேஷில் இருந்து வந்த வங்காள மொழி பேசும் மக்களுக்கும், உள்ளூர் அசாம் மக்களுக்கும் இடையே காணப்படும் மதம், மொழி, இனம் குறித்த பாகுபாடுகள் இங்கே முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்னும் மீதமிருக்கும் இரண்டு தேர்தல் போர்க்களங்கள் தமிழ்நாடும், கேரளாவும் தான். கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பல ஊழல் பிரச்சனைகளில் சிக்கி வருவதால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளால் பினராயி விஜயன் மீதிருந்த நம்பிக்கை மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை.
பா.ஜ.க-வுக்கு கேரளாவில் வாய்ப்பு மிக குறைவு. காரணம், மக்கள்தொகையில் 45% முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் கேரளாவில் இருப்பதால் காங்கிரசுக்கு சாதகமாகவே அமையக்கூடும்.
தமிழ்நாட்டு அரசியல் களம் தான் யாராலும் கணிக்க முடியாத நிலையில் இப்போது உள்ளது. ரஜினி காந்த் அரசியலுக்கு வரும் பட்சத்தில் 15-20% வாக்குகள் பிரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த மாதம் சசிகலா சிறையிலிருந்து விடுதலை அடைவதால், இதன் தாக்கமும் அ.இ.அ.தி.மு.க-வுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
இருப்பினும், அ.இ.அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ரஜினி வாயை திறந்துவிட்டால் அதுவும் நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும். இதுவரை தன்னுடைய ஆதரவு யாருக்கென ரஜினிகாந்த் அவர்கள் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. கலைஞர் அவர்கள் தொடர்ந்து ஜெயித்து வர, அதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா முறியடித்து 2011 மற்றும் 2016 இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றார். 2016 டிசம்பர் மாதம் அவர் இறந்தார்.
அ.இ.அ.தி.மு.க – பா.ஜ.க உடனான கூட்டணி பக்க பலமாக அமைந்தாலும், இன்னொரு பக்கம் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை வழிநடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதில் ரஜினிகாந்த் எந்த கூட்டணி நோக்கி கையை அசைக்கிறாரோ, அக்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
பா.ஜ.க-வை பொறுத்தவரை மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிப்பதே முக்கியமான நோக்கமாகும். மேற்கு வங்காளத்தில் பல சூழ்ச்சிகளில் பா.ஜ.க இதுவரை வீழ்ந்ததை நினைவில் கொண்டு, அதற்கு ஏற்றார்போல் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.
விரிக்கப்படும் சூழ்ச்சி வலைகளில் சிக்காமல் வங்காள மக்கள் மனதின் பிரதிபலிப்பாக பா.ஜ.க இருக்கும் பட்சத்தில் அதன் வெற்றி வாய்ப்பை யாராலும் பறிக்க முடியாது என்பதே பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.