கோவை 15.12.20
கோவை தடாகத்தை அடுத்த மாங்கரையில் உள்ள காவல்துறையினரின் சோதனைச் சாவடி அருகே அதிகாலை 4 மணியளவில் அசைந்தாடி வந்த மிகப்பெரிய தந்தங்களுடன் கூடிய காட்டு யானை அங்கிருந்த நாய் குரைத்ததால் கோபமடைந்து நாயை விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது ஆனைகட்டி மலையை ஒட்டியுள்ள மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மாங்கரையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடி அருகே ஆனைகட்டி செல்லும் சாலையில் ஒரு மிகப்பெரிய தந்தங்களுடன் கூடிய காட்டு யானை ஒன்று அசைந்தாடி வந்தது.
சாலையில் வந்த காட்டு யானையை கண்டு அங்கிருந்த நாய் ஒன்று குரைத்தவாரே அருகில் சென்றது. நாய் குரைத்ததில் கோபமடைந்த காட்டு யானை திடீர் என அந்த நாயை துரத்திச் சென்றது.
இதனை அருகில் சென்று யானையைப் பார்த்துக்கொண்டிருந்த நபர் யானை நாயை துரத்தி வந்ததைப் பார்த்து பயந்து அங்கிருந்து ஓடினார். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.