கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு நோயாளிகளை அனுமதிக்க தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர உடலை திருப்பித்தர ரூ.11.5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு சரவணம்பட்டி பகுதியில் இயங்கிவரும் முத்தூஸ் மருத்துவமனை கூறுவதாக நபர் ஒருவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் முத்தூஸ் மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்க தடைவிதித்து விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான்கு மருத்துவமனைகள் மீது புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஒரு மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே இருக்கலாம். மற்ற 3 மருத்துவமனைகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற எண்ணை அழைக்கலாம்.” என்றார்.