தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் தத்தா சாம்பியன் பட்டம்

கோவை, டிசம்பர் 14

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கோவையில் நடைபெற்ற ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் தத்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

மிகவும் புகழ்பெற்ற ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ 23வது தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயம் கோவை அடுத்த செட்டிபாளையம் காரி மோட்டர் ஸ்பீட்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கார் பந்தயம் இன்று நிறைவடைந்தது.

இந்த போட்டியில் பார்முலா எல்ஜிபி4 பிரிவில் சென்னையைசேர்ந்த அஸ்வின் தத்தா (டார்க் டான் ரேசிங்) மற்றும் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை போட்டியில் கோட்டயத்தைச் சேர்ந்த அமீர் சையது (எம்ஸ்போர்ட்) ஆகியோர் வெற்றி பெற்றனர். பார்முலா எல்ஜிபி4 கார்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின்3 பந்தயங்களிலும் முதலிடத்தை அடைய தனக்கான வாய்ப்பை மிகவும் அற்புதமாக பயன்படுத்தி அஸ்வின் 2 பந்தயங்களில் முதலிடம் பிடித்தார்.

இந்த போட்டிகளில் விஷ்ணு பிரசாத் மற்றும் ராகுல் ரங்கசாமி ஆகியோரும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். போட்டி துவங்கியது முதல் மிகவும் விறுவிறுப்பாகவே இருந்தது. ஒருவரையொருவர் முந்திச் செல்வதற்கு கடுமையாக போராடினர். 3வது பந்தயத்தில் 15வது சுற்றில் விஷ்ணு 6வது திருப்பத்தில் முன்னேற முயன்றார். இதன் காரணமாக அவரது கார் அஸ்வின் காருடன் உரசியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ராகுல் ரங்கசாமி முதலிடம் பிடித்தார்.

அவரைத் தொடர்ந்து சரோஷ் மற்றும் சந்தீப் ஆகியோர் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர். 3வது சுற்றில் தான் தோல்வி அடைந்தது அஸ்வின் தத்தாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நோவிஸ் கோப்பைக்கான 2 பந்தயங்களிலும் அமீர் சையது அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக காரை ஓட்டி தனக்கான வெற்றியை தக்கவைத்துக் கொண்டார். இது அவரது 6வது வெற்றியாகும்.

பெண்கள் பிரிவில் எம்ஸ்போர்ட்டின் மீரா எர்டா வார இறுதியின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார். இதேபோல் பெண்களுக்கான நோவிஸ் கோப்பை பிரிவில் அஹுரா ரேசிங்கின் அனுஷிரியா குலாட்டி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 15 பிரிவுகளில் நடைபெற்ற கார் பந்தயத்தில் , இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 8 அணிகளை சேர்ந்த 40 கார் பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஐந்து சுற்று வாரியாக நடைபெற்ற இப்பந்தத்தில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறக்கூடிய வீரர்களுக்கு வரும் ஜனவரி மாதம் , JK tyre Fmsci தேசிய கார் பந்தய சேம்பியன்ஷிப்கான இறுதி சுற்று போட்டியில் பங்கேற்பர். அப்போட்டியில் வெற்றி பெறக்கூடிய வீரர் அடுத்து ஆசிய அளவிலான கார் பந்தய போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பர் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் கொரோனா காரண்மாக நீண்ட இடைவெளிக்கு பிறகு கோவையில் இன்று இப்பந்தயம் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இப்போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here