சென்னை, டிசம்பர் 3:
சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளின் வீட்டில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது:-
சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” மாநில தலைமையகம் மற்றும் முன்னாள் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் வீடு ஆகியவற்றில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று திருவல்லிக்கேணியில் தேசிய செயற்குழு உறுப்பினர் யா முகைதீன் அவர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறையினரின் சோதனை குறித்து தேசிய தலைவர் O.M.A. சலாம் தனது டுவிட்டரில், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய விரோத சட்டத்தை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை துவங்கியுள்ள நிலையில், போராட்டத்தை திசை திருப்புவதற்காகவும், பாஜக தனது அரசியல் தோல்வியை மறைப்பதற்காகவும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” மாநிலத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநில தலைமையகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.