கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்தது.
திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது மட்டுமின்றி படப்பிடிப்புகலும் ரத்து செய்யப்பட்டன.
பின்பு கொரோனா தொற்று குறைய தொடங்கிய பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியும் அளித்தது.
ஆனால் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் திரையுலகம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
பெரிய படங்கள் வெளியாகவில்லை. வெளியான சிறிய படங்களுக்கும் போதிய வரவேற்பு இல்லை. எனவே திரையரங்கு உரிமையாளர்கள் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்புகளும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தன. இவர்களின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்க்கும் வகையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை அனுமதி மறுபரிசீலனை செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்ப நிலை நீடிக்கிறது. திரையுலகினரும் குழம்பிப்போய் தான் உள்ளனர். ஒருவேளை அரசு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை மாறினால் வெளியிடப்படும் படத்தின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி ‘மாஸ்டர்’ பட வெளியீடு நிலை என்ன என்பது அரசின் அறிவிப்புக்குப் பிறகே தெரிய வரும் என்கிறார்கள்.