சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் பால்ராஜ். ஆதிதிராவிட வகுப்பிலிருந்து கிருஸ்தவ மதத்திற்கு மாறினார்.
பின்னர் இவர், அதே சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என ஜாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தை மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்று வழங்க முடியாது எனக் கூறி, நிராகரித்தார்.
இதனை எதிர்த்து பால்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் 25.11.2021யன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘ஒரே ஜாதியைச் சேர்ந்த ஒருவர் மதமாறிவிட்டு, பின்னர் அதே ஜாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு தங்களுக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோருவதை ஏற்க முடியாது. மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும்’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.