தமிழர்கள் ஏமாளிகள் போல நடித்துக் கொண்டிருக்கிறார்களா அல்லது உண்மையிலேயே ஏமாளிகளா என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்துவிடும் செயல்கள் அனுதினமும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது குறித்து சிந்திக்கக்கூட விடாமல் மக்களை திசைத்திருப்பும் பணி செவ்வனே நடந்து கொண்டிருக்கிறது. அதையும் தமிழர்கள் நம்புகின்றனர். அல்லது நமக்கென்ன என்று கடந்து போய்கின்றனர்.
தமிழனின் மிகப்பெரிய பிரச்சனை மதுவிற்கு அடிமையாகிக்கிடப்பது. ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று பெண்கள் மதுவின் கொடுமையால் விதவைகளாகியுள்ளனர். பல குழந்தைகள் தங்கள் தந்தைகளை இழந்துள்ளன.
தமிழகத்தில் நடக்கும் பல தற்கொலைகள், கொலைகள், அடிதடிகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது குடிபோதை தான். இதில் தமிழினம் அழிந்து கொண்டிருப்பது குறித்து, எந்த அரசியல்கட்சியோ, அமைப்புகளோ கவலைப்படுவதில்லை. ஒரு சில அமைப்புகள் பெயரளவிற்கு போராட்டம் நடத்துவதும், தங்களுக்கு நெருக்கமான கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் சைலண்ட் மோட் சென்றுவிடுவதும் நடக்கிறது.
ஆனால் ஆட்சியாளர்களோ மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தை டாஸ்மாக் மூலம் பெருகின்றனர். அதாவது ஏழை, எளிய மக்களை குடிக்கு அடிமையாக்கி, அவர்களிடமிருந்து கடுமையான வரிவிதிப்பதன் மூலம் நிதி திரட்டுகின்றனர். இதனால் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர்.
தமிழர்களின் விலை மதிப்பில்லா ஓட்டுக்களை தேர்தலுக்கு தேர்தல் விலை கொடுத்து வாங்குகின்றனர்…
தமிழர்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடப்பதில்லை.
ஆனால் இவற்றையெல்லாம் குறித்து எந்த புரட்சியாளரும் பேசுவதில்லை. ஆனால் ஆண்டிற்கு 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கும்(தற்போது மத்திய அரசு 11 புதிய கல்லூரிகளை அளித்துள்ளதால் 4 ஆயிரம்) விவகாரத்தை அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் கையில் எடுத்துக் கொண்டு தங்களது தோல்விகளை திசைத்திருப்பிக் கொண்டிருக்கின்றனர்.
நீட் தேர்வில் எப்படி ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று யாரும் விளக்குவதில்லை. நாட்டில் உள்ள பின்தங்கிய மாநிலங்கள் முதற்கொண்டு வேறுஎந்த மாநிலமும் எதிர்க்காத நிலையில் தமிழகம் மட்டும் எதிர்ப்பது ஏன்?
தமிழக அரசியல்வாதிகளுக்கு சாமானிய மக்களின் சில கேள்விகள்… திறந்த மனதுடன் பதில் சொல்வார்களா?
*நீட் தேர்வு மூலம் ஏற்கனவே இருந்ததைப்போலவே 85 சதவீதம் மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் வாய்ப்பு பெறுவார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா?
- நீட்தேர்வுக்கு முன்பாக அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் கடந்த பல ஆண்டுகளாக வாய்ப்பு பெற்று வந்தனர் என்பது உண்மை தானே?
- நீட்தேர்வுக்கு முன்பாக நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகள் மட்டும் பிளஸ் டூ தேர்வில் மிக அதிகமதிப்பெண் பெற்றது எப்படி? மருத்துவக்கல்லூரிகளில் அந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் வாயப்பு பெற்றது உண்மை தானே?
*அந்த பள்ளிகளில் சீட் கிடைக்க, வசதி படைத்த பெற்றோர் கட்டுக்கட்டாக பணத்துடன் வரிசையில் நின்றது உண்மையில்லையா? அவர்கள் வந்த கார்கள் பல கி.மீ. தொலைவிற்கு நிற்பதை காட்டியே அந்த பள்ளிகள் மார்க்கெட்டிங் செய்தனவே?
- நீட் தேர்வுக்கு முன்பு குறைந்த பட்ச மதிப்பெண் பெற்று பிளஸ் டூவில் தேர்ச்சி பெறும் மாணவர், கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து சீட் வாங்கியது உண்மையா இல்லையா? அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை என்பது உண்மை தானே?
- நீட்தேர்வுக்கு முன்பாக தனியார் மருத்துவக்கல்லூரிகள் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை வாங்கியது உண்மையா இல்லையா?
- நீட் தேர்வுக்கு பின்னர், மலைவாழ் மக்களின் குழந்தைகள், தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள், கிராமப்புற ஏழை எளிய மக்களின் குழந்தைகள் வாய்ப்பு பெற்றுள்ளனரே… அதை ஏன் தடுக்க நினைக்கின்றீர்கள்?
- தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில், இப்போதும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சேரும் வாய்ப்பு உள்ளதே… அதை தடுக்க உத்தரவிட்டு, தமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்க நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை?
- நீட்டிற்கு முன்பாக, பல தனியார் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடம் எடுக்காதது உண்மை தானே? பல பள்ளிகளில் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது உண்மையா இல்லையா?
- தனியார் பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் வாங்குவதை பள்ளிக்கல்வித்துறை ஏன் கேள்வி கேட்பதில்லை?
- தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை கல்விக்கு செலவிடும் தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தமிழர்களா இல்லையா? ஏன் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் பணியில் இறங்குகின்றீர்கள்?